சினிமா

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தனுஷ் நிதி உதவி

Published On 2017-08-03 05:16 GMT   |   Update On 2017-08-03 05:16 GMT
வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 130 பேருக்கு நடிகர் தனுஷ் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
தமிழகத்தில் பருவமழை முறையாக பெய்யாததால் வறட்சி ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இதனால் மனமுடைந்த தமிழக விவசாயிகள் 130 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க நடிகர் தனுஷ் முடிவு செய்தார்.

அதன்படி அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று அவர் வந்தார். பின்னர் தனது தாயார் விஜயலட்சுமி பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை சார்பில் தேனி உள்பட தமிழகம் முழுவதும் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 130 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தனுசின் மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனுசின் தாயார் விஜயலட்சுமி, இயக்குனர் சுப்பிரமணியசிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News