ஆட்டோமொபைல்
வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
இந்தியாவில் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.
இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் முடிவடைவதாக இருந்தது.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையிலும் இந்த கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததன் பெயரில் மத்திய அரசு தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.