செய்திகள்
சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு - பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
கர்த்தூம்:
சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கர்த்தூமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியிலும் போராட்டம் வெடித்தது. இந்த தர்ணா போராட்டம் சுமார் ஒரு வார காலம் நீடித்த நிலையில் நேற்று ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சூடான் நாட்டுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதேபோல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.