செய்திகள்
ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
ரபேல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. #RafaleDeal #RafaleReview
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறைகளில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த சீராய்வு மனுக்களுடன், பத்திரிகைகளில் வந்த செய்திகளில் குறிப்பிட்டுள்ள சில ஆவணங்கள், ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். அப்போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக அனைத்து விவரங்களையும் வெளியிடுவது சரியாக இருக்காது என அவர் தெரிவித்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு பல்வேறு தகவல்களை மறைத்ததாக மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleReview