செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2019-06-08 07:00 GMT   |   Update On 2019-06-08 07:00 GMT
அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை; அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.
மதுரை:

மதுரையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு ஒரே தலைமை தேவை.  தற்போது ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை.  கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். 

2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்.

அதிமுகவில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என தெரியவில்லை. நான் சொல்லும் கருத்துக்கள் கட்சியின் உட்பிரச்சினையல்ல. தினகரன் என்ற மாயை இப்போது இல்லை என தெரிந்து விட்டது. தேர்தலில் முக்கிய தொகுதிகளை அ.தி.மு.க. இழந்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. 



ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் 10 முறை அமைச்சரவை மாறியிருக்கும். புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தவில்லை. தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒரு போதும் விலக மாட்டார்கள் என கூறினார்.

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி என்று இரண்டு தலைமை இருக்கும் நிலையில், ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News