மணலி புதுநகரில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
திருவொற்றியூர்:
மணலி சின்ன சேக்காடு பார்த்தசாரதி கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (45) கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று மணலி புதுநகர் காவல் நிலையம் பின்புறம் உள்ள மசூதி எதிரில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அருகில் மின்சார வயர் சென்று கொண்டிருந்தது. உயரமான கான்கிரீட் தூண் அமைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திடீரென மின் கம்பியில் சாய்ந்தது. இதனால் மின்சாரம் கீழே வேலை செய்து கொண்டிருந்த காமராஜ் மீது பாய்ந்தது. இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
அருகில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மணலி புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மரணம் அடைந்த ஊழியர் காமராஜுக்கு வசந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இன்று காலை காமராஜின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மணலிபுதுநகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இறந்து போனவருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் இழப்பீடு பெற்றுத் தரும் படி வலியுறுத்தினர். போலீசார் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.