கோட்டக்குப்பத்தில் உறவினர் வீட்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் தேவி தியேட்டர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது21). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரிடம் விருத்தாசலத்தை சேர்ந்த உறவினர் சிவா(19) என்பவர் அணுகி புதுவையில் ஏதாவது வேலை வாங்கி தருமாறு கேட்டார். அதனை ரஞ்சித்குமார் ஏற்று சிவாவை தனது வீட்டுக்கே வரவழைத்து வீட்டில் தங்க வைத்தார். மேலும் சிவாவுக்கு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் தனது விலை உயர்ந்த செல்போனை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது செல்போனை காணாமல் திடுக்கிட்டார். மேலும் சிவாவும் மாயமாகி இருந்தார். தனது செல்போனை சிவா திருடி சென்று இருக்கலாம் என எண்ணி அவரை தேடி வந்தார்.
இந்த நிலையில் புதுவையில் சுற்றி திரிந்த சிவாவை பிடித்து ரஞ்சித்குமார் விசாரித்தார். அப்போது செல்போன் திருடியதை சிவா ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிவாவை கோட்டக்குப்பம் போலீசில் ரஞ்சித்குமார் ஒப்படைத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.