புதுவை பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபர் கைது
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை போலீசாருக்கு பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையை பார்த்த போது 51 மதுபாட்டில்கள் இருந்தன.
இதனை தொடர்ந்து அந்த வாலிபரை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த அழகர் (வயது39) என்பது தெரியவந்தது. இவர் புதுவையில் உள்ள தனியார் பாரில் வேலைபார்த்து வந்து உள்ளார். இவர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அழகரை கைது செய்து அவரிடமிருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.