செய்திகள்

பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்

Published On 2019-01-10 10:23 GMT   |   Update On 2019-01-10 10:23 GMT
கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

மேலும் வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர் கண்டிகை உள்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீரும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.

கோடை வெயில் மற்றும் பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 பிரதான ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்தது. அதே போல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் கண்டலேறு அணையிலும் தண்ணீர் இருப்பு குறைந்தது.

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் சுமார் 30 நாட்கள் தான் குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. எனவே கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட ஆந்திர அரசை வலியுறுத்த தமிழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

இந்த நிலையில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்கள் முரளீதரன், பக்தவத்சலம் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று ஐதராபாத் சென்று கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்றனர்.

கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியக்குழு தலைவர் ஆர்.கே. ஜெயின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பொதுப் பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து ஆர்.கே.ஜேயின் பேசியதாவது:-

பருவ மழை நீர் மட்டும் ஸ்ரீசைலம், சோமசிலா அணைகளில் இருந்து கண்டலேறு அணைக்கு வருடந்தோறும் 50 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேரும். பருவ மழை பொய்த்து போனதால் 2018-ல் கண்டலேறு அணைக்கு 16 டி.எம்.சி. தண்ணீர் தான் கிடைத்துள்ளது.

தற்போது கண்டலேறு அணையில் 7. 50 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பில் உள்ளது. இது ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு மற்றும் குடிநீருக்காக எப்போதும் சேமித்து வைப்போம்.

ஆகையால் தற்போதைக்கு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது. அதிர்ஷ்டவசமாக மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் மார்ச் மாதத்தில் தண்ணீர் திறப்புக்கு பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையே ஆந்திர அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர். இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News