செய்திகள்

பெரம்பூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 3 கொள்ளையர்கள் கைது

Published On 2018-12-14 09:27 GMT   |   Update On 2018-12-14 09:27 GMT
பெரம்பூரில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்தவர் அமர்நாத் (19). இவர் நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ரமணாநகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்த 3 பேர் அமர்நாத் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்கள்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கத்தியை காட்டி பறித்தனர். பின்னர் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார்கள்.

திருடன் திருடன் என்று அமர்நாத் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். அப்போது அருகில் உள்ள சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிகளை மடக்கி பிடித்தார்.

அவர்கள் பறித்துச் சென்ற பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தார்.

அப்போது அவர்கள் புழலை சேர்ந்த பாட்சா (19), எருக்கஞ்சேரியை சேர்ந்த தீபக் (21), ஜெயசந்திரன் (21) என்பது தெரியவந்தது. பல இடங்களில் இது போல் கத்தியை காட்டி பணம், செல்போன்களை பறித்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளும், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News