செய்திகள்

வியாசர்பாடியில் பஸ்சில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல் - 10 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

Published On 2018-12-13 09:28 GMT   |   Update On 2018-12-13 09:28 GMT
சென்னை வியாசர்பாடியில் ஓடும் பஸ்சில் உருட்டு கட்டை, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவர்கள் உருட்டு கட்டை, ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் மோதிக் கொண்டனர். பெரிய பாளையத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி வந்த மாநகர பஸ்சில் பயணம் செய்த 2 கல்லூரிகளின் மாணவர்கள் திடீரென மோதிக் கொண்டனர்.

10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோஷ்டியாக மோதிக் கொண்டதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த மோதலில் பஸ்சின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டன. ஓடும் பஸ்சில் நடந்த இந்த மோதல் குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உதவி கமி‌ஷனர் அழகேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் காளிராஜன் ஆகியோர் டிரைவர், கண்டக்டர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த பஸ்சில் வழக்கமாக பயணம் செய்யக்கூடிய மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை பிடிக்கும் வேட்டையில் இறங்கினர்.

மோதலில் ஈடுபட்டது அம்பத்தூர் அரசு கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இரு கல்லூரிகளை சேர்ந்த ஜெகதீஸ்வரன், தினேஷ்குமார், வினோத், ஜெயராமன், விக்னேஷ், குரல் உள்ளிட்ட 10 பேர் போலீஸ் வலையில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவர்களின் பெற்றோர்களும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் குறித்த தகவலையும் பெற்று நடவடிக்கையில் இறங்கினர்.

சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்கிறார்கள். #tamilnews
Tags:    

Similar News