search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் மோதல்"

    • அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.

    அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.

    பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.

    மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குளித்தலை:

    கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் திருச்சி, தொட்டியம், முசிறி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி சார்பில் மாணவர்களுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் (வயது 19) 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். இன்று காலை இந்த 2 மாணவர்களும் சக மாணவ, மாணவிகளுடன் கல்லூரிக்கு புறப்பட்டனர்.

    குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி மோதலாக உருவானது.

    இருவரும் கைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தினார்.

    இதனால் அவருக்கு ரத்தம் பீறிட்டது. நிதீஷ்குமார் அலறிதுடித்தபடி சாய்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக திருப்பி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

    படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்தனர்.

    மாணவர் அண்ணாமலை சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும், இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் நிதிஷ்குமாரின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.

    கல்லூரி பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இருக்கல்லூரி மாணவர்கள் திடீரென ரெயில் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • மாணவர்கள் மோதல் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இருக்கல்லூரி மாணவர்கள் திடீரென ரெயில் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    மாணவர்கள் மோதல் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.
    • மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்தனர்.

    திருப்போரூர்:

    தாழம்பூர், ஓ.எம்.ஆர். சாலையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது தாழம்பூர் அருகே இருதரப்பு மாணவர்களிடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி

    பிடித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுபோன்று மீண்டும் மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்று விட்டனர். இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
    • வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியின் அரசு பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் இருவருக்கு இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி பிளஸ்-1 மாணவனின் சகோதரர் சந்தானராஜ் தட்டிகேட்ட போது பிளஸ்-2 மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கினர்.

    இதையடுத்து சந்தானராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் சாரம் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவன் அவரது நண்பர்களுடன் இருந்த போது மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் சந்தானராஜின் நண்பரான கல்லூரி மாணவர் திருமலையை (வயது18)எதிர்தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த சக்தி (19), ஆகாஷ் (20), மகேந்திரன் (22), சுபாஷ் (19) ஆகியோரை தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோஸ், பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஒரு மாணவிடியை 4 பேர் காதலித்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    வாலிபர் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியை அதே நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மேலும் 3 பேர் காதலித்து வந்தனர்.

    அந்த மாணவியும் எல்லோரிடமும் காதலிப்பது போல் சரிசமமாக பேசி வந்துள்ளார்.

    இது குறித்து 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு தெரிய வரவே, அவர் மாணவியை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக மாணவியை காதலித்து வரும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கரடிகுடியில் உள்ள 2-ம் ஆண்டு மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படு காயமடைந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மாணவனின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
    • 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேட்டில் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இருப்பினும் நேற்று மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.

    இதுபற்றி தகவலறிந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். மேலும் மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது பள்ளி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    போலீசார் விசாரணையில், யார் தலைவர் என்கிற போட்டியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை இறைவணக்கத்தின்போது அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    திருப்பூர் அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு என தனியாக விடுதி நடத்தப்படுகிறது.

    இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கர்னூல், காவாலி என்ற பெயரில் தனித்தனியாக குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரி உணவகத்தில் சமையல் செய்யப்படுகிறது.

    இந்த உணவுகளில் காரமான ஆந்திரா மிளகாயை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென கர்னூல் பகுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதிக அளவு மிளகாய் உணவில் சேர்க்கப்பட்டது.

    இதற்கு காவாலி பகுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உணவில் போதுமான அளவு மட்டுமே மிளகாய் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்க்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

    இதனால் விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தாக்கினர்.

    இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

    உணவில் மிளகாய் சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

    • பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அரசு தொழிற்கல்வி மையம்(ஐ.டி.ஐ.) மற்றும் அரசு பள்ளிகள் அருகருகே உள்ளது. இங்கு பின்புறம் உள்ள பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அது கை கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர், தொழிற்கல்லூரி மாணவர்கள் 4 பேர் 8 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ராமிரெட்டிபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு தலைமைஆசிரிய ராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் 30 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சிலர் ஆசிரியருக்கு ஆதரவாக இதை தட்டிக்கேட்ட னர். இதனால் அவர்க ளுக்கிடையே மோதல் உண்டானது.

    இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தாக்கப்பட்ட மாணவர்க ளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாண வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இதனால் பள்ளியின் தலைமைஆசிரியர் உமாராணி 2 தரப்பு மாண வர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவர்களிடம் எழுதி வாங்கியும், பெற்றோரிடம் மாணவர்களை கண்டிக்க வும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதால் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று மாலையிலும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை பிடித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இரு தரப்பினருக்கும் அறிவுரைகளை கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் பஸ் நிலையத்தின் சுரங்கப்பாதை பகுதியில் 11-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.அப்போது மாணவிகள் இருவரும் மாறி மாறி வசை பாடினார்கள். இது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    தகராறில் ஈடுபட்ட மாணவிகளை சக மாணவிகள் சமாதானம் செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்நிலையத்தில் தகராறில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் பள்ளி மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் நடைபெற்றது.

    எனவே காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திறந்து வைப்பதுடன் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    ×