தி.நகர் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி - அதிமுக பிரமுகர் கைது
சென்னை:
தி.நகர் ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் அஜந்தா. சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது உறவினர் ஒருவருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ரூ.6 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த பணத்தை காமராஜ் பெற்றுக் கொண்டார். ஆனால் உறுதி அளித்த படி அவரால் வேலை வாங்கி கொடுக்க முடியவில்லை.
இதனால் 4 மாதங்களுக்கு பிறகு காமராஜ் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
அஜந்தா பலமுறை கேட்டும் காமராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அஜந்தா மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காமராஜ் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கைதான காமராஜ் குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.