செய்திகள்

காதலியை திருமணம் செய்ய பெற்றோர் காலம் தாழ்த்தியதால் என்ஜினீயர் தற்கொலை

Published On 2018-09-01 10:39 GMT   |   Update On 2018-09-01 10:39 GMT
காதலியை திருமணம் செய்ய பெற்றோர் காலம் தாழ்த்தி வந்ததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் அய்யம்பெருமாள். இவரது மகன் சாமிநாதன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் படி கடந்த 2 வருடங்களாக கூறி வந்தார்.

அதற்கு அவரது பெற்றோர் வயது 25 தான் ஆகிறது. இன்னும் 1 வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியதாக தெரிகிறது. பெற்றோர் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்ததால் கடந்த சில நாட்களாக சாமிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரத்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார்.

பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வி‌ஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார். அவர்கள் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்து சாமிநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News