search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பதில் அவசரம் - இம்ரான் கான் மீது பாக்.எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
    X

    இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பதில் அவசரம் - இம்ரான் கான் மீது பாக்.எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்

    முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. #ImranKhan #HasteinMending #FenceswithIndia
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
     
    மேற்கண்ட இரு சம்பவங்களையடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்தியாவின் நடவடிக்கை குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், ‘இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ‘‘இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றத்தையும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்த உதவக் கூடிய நல்லதொரு பேச்சுவார்த்தையை மீண்டும் ஒரு முறை இந்தியா வீணடித்து விட்டது. 

    இந்தியாவின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு அதிருப்தி அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்தில் அதை ரத்து செய்து இருப்பதற்கு இந்தியா கூறும் காரணமும் ஏற்புடையது அல்ல’’ என்று தெரிவித்தது.

    இந்நிலையில், முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம்  காட்டியதால்தான் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    ‘இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால் மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இது முழுக்க முழுக்க அந்நாட்டின் அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    முன் அனுபவம் இல்லாத பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அவசரமான நகர்வு என அந்நாட்டு இருபெரிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) ஆகியவை விமர்சனம் செய்துள்ளன. 

    இந்த "ராஜதந்திர தோல்வி"க்கு இம்ரான்கான்தான் பொறுப்பு என்று கூறியுள்ள அக்கட்சிகள், பேச்சுவார்த்தையை நாடுவதற்கு முன்னதாக  அதற்கான வீட்டுப் பாடத்தை ஒழுங்காக முடித்த பின்னர் இந்த நடவடிக்கையை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளன. 

    நாமாக முன்வந்து சமாதானத்துக்கு கைகொடுப்பது என்பது நமது பலவீனமாக மற்றவர்கள் புரிந்து கொள்ள கூடாது. இந்தியாவுடன் சமாதானம் செய்துகொள்ள பாகிஸ்தான் அவசரப்படுவதுப் போன்ற ஒரு தோற்றத்தை தனது முதிர்ச்சி பெறாத நடவடிக்கையின் மூலம் இம்ரான் கான் உருவாக்கி விட்டதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான காவ்ஜாமொஹம்மத் ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். #ImranKhan #HasteinMending #FenceswithIndia 
    Next Story
    ×