search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கு விசாரணை - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்
    X

    ஊழல் வழக்கு விசாரணை - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்

    அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். #NawazSharif #CorruptionCase
    இஸ்லாமாபாத்:

    பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகள் மற்றும் முகமது சப்தாருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்து கடந்த மாதம் 6-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்குகள் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி அர்ஷத் மாலிக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நவாஸ் ஷெரீப்பை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கில் தொடர்புடையவர்கள், நீதிபதி மற்றும் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அதிகாரிகள் தடைவிதித்தனர். பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    கோர்ட்டில் நீதிபதி முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே சமயம் இந்த வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. முந்தைய அவன்பீல்டு வழக்கிலும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை என்பதும், இதனால் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கோர்ட்டு ஏற்கனவே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  #NawazSharif #CorruptionCase  #tamilnews
    Next Story
    ×