search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க பெண்களுக்கு முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் - பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம்
    X

    அமெரிக்க பெண்களுக்கு முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் - பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம்

    அமெரிக்காவில் பிரபல நிறுவனத்தின் முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்க்கு அந்த நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    வாஷிங்டன்:

    பெண்கள் அழகுக்கு அழகு சேர்க்க முகப் பவுடர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த நிலையில், பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்று, தயாரித்து வழங்கும் முகப்பவுடரில் சேர்க்கப்படுகிற ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்னும் பொருள், சினைப்பை புற்றுநோயை ஏற்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இது தொடர்பாக மிசவுரி மாகாணத்தின் செயிண்ட் லூயிஸ் நகரை சேர்ந்த 22 பெண்களும், அவர்களது குடும்பத்தினரும் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அங்குள்ள சிவில் கோர்ட்டு விசாரித்தது.

    விசாரணையின்போது, தனிப்பட்ட சுகாதாரத்துக்காக தாங்கள் பயன்படுத்திய முகப்பவுடர்தான் தங்களுக்கு சினைப்பை புற்றுநோயை வர வைத்து விட்டது என்று வழக்குதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    ஆனால் அந்த முகப்பவுடர் நிறுவனம், குற்றச்சாட்டை மறுத்தது. “எங்கள் முகப்பவுடரில் ஆஸ்பெஸ்டாசும் இல்லை, எங்கள் முகப்பவுடர் புற்றுநோய் தாக்க காரணமாகவும் அமையவில்லை” என்று கூறியது.

    இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 6 வாரங்கள் நடைபெற்றன.

    அதன்முடிவில் அந்த முகப்பவுடர் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 550 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,740 கோடி), அபராதமாக 4.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27 ஆயிரத்து 880 கோடி) செலுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்து சம்மந்தப்பட்ட முகப்பவுடர் நிறுவனம் சார்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த தீர்ப்பு, எங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கி உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைமுறை, அடிப்படையில் நியாயமற்றது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்” என்று கூறியது. 
    Next Story
    ×