search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தனியார் நிறுவன ஊழியர் கைது
    X

    ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- தனியார் நிறுவன ஊழியர் கைது

    காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 27 வயது இளம்பெண் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த வாரம் சொந்த ஊர் சென்ற அந்த பெண் நேற்று முன்தினம் கோவைக்கு வந்து அங்கிருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அவர் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தார். இளம்பெண் தூங்குவதை கண்ட ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக எழுந்து அந்த பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். அதற்குள் அந்த ரெயில் நேற்று காலை காட்பாடியை வந்தடைந்துவிட்டது.

    இளம்பெண் அளித்த புகார் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு டிக்கெட் பரிசோதகர் தகவல் அனுப்பியிருந்தார். அதன்பேரில் சேரன் எக்ஸ்பிரஸ் வருவதை எதிர்பார்த்து காட்பாடி ரெயில்வே போலீசார் தயாராக இருந்தனர். ரெயில் வந்ததும், பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது30) என்பதும், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×