search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை- ரோட்டில் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக பலத்த மழை பெய்தது. மழை தண்ணீர் சாலையில் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக கொடுமுடி, ஊஞ்சலூர், சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக மழை கொட்டியது. கொடுமுடி பகுதியில் மட்டும் அதிகப்பட்சமாக 44மி.மீ மழை கொட்டியது.

    இதேபோல் ஈரோடு, கவுந்தப்பாடி, கோபி, எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் அதிக மழை கொட்டியது.

    ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை தொடர்ந்து அரைமணி நேரத்துக்கு மேலாக பலமாக கொட்டியது.

    நேற்று பெய்த மழையின் போது காற்று அதிகமாக பெய்யவில்லை. இதனால் மழை பலமாக கொட்டியது. இந்த மழையால் கே.என்.வி. ரோடு, சூரம்பட்டி ரோடு, கொல்லம்பாளையம், மூலப்பாளையம், பெருந்துறை ரோடு ஆகிய இடங்களில் மழை தண்ணீர் ரோட்டில் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு நேரத்தில் ஈரோட்டில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.

    ஈரோடு காளைமாட்டு சிலையிலிருந்து கொல்லம் பாளையம் ரெயில்வே மேம்பாலம் வரை வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல் பூந்துறை ரோடு மூலப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே ஏற்கெனவே பாதாள சாக்கடை பணியில் பழுது காரணமாக 3 மாத காலமாக வேலை நடந்து வருகிறது. அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    நேற்று இரவு மழை பெய்ததையொட்டி மிகவும் நெரிசல் ஏற்பட்டு மக்களும் வாகன ஓட்டிகளும் படாதபாடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடுமுடி- 44
    எலந்தகுட்டைமேடு- 34.4
    கவுந்தப்பாடி-25
    ஓலப்பாளையம்-24
    ஈரோடு - 21
    கோபி-17
    பவானி - 14.4
    வரட்டுப்பாளையம் அணை-10
    சென்னிமலை-5
    மொடக்குறிச்சி-4
    மொடக்குறிச்சி - 4
    Next Story
    ×