search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்கள் நாளை அரசாணை எரிப்பு போராட்டம்
    X

    அரசு ஊழியர்கள் நாளை அரசாணை எரிப்பு போராட்டம்

    அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது. #Governmentworker #struggle

    சென்னை:

    அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது. இது குறித்து சங்கத்தினர் பொதுச் செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசாங்க வேலை என்பது இன்னும் சில வருடங்களில் இல்லை என்னும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வில்லை. தேவைப்படும் இடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்து கொள்ளுதல், ஒப்பந்த முறையில் பணியாளர்களை அமர்த்துதல் போன்ற நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

    மேலும் தற்போது நடை முறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம், நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கருவூல கணக்கு துறையை அரசு துறையில் இருந்து கழற்றி விடும் ஏற்பாடு துவங்கி விட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிசே‌ஷய்யா கமிட்டி அமைக்கப்படுவதற்கு முன்பே ஆட்குறைப்பு நடவடிக்கைகளும், தனியார் வசம் துறைகளை ஒப்படைக்க ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

    கருவூல கணக்கு துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதன்மூலம் அரசு ஊழியர்களின் பணிப்பதி வேடுகள் பொது ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் தனிப்பட்ட அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த முறையில் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

    தமிழக முதல்வர் இந்த வி‌ஷயத்தில் உடனடியாக தலையிட்டு மாணவர்கள், இளைஞர்கள் நலனும் வேலைவாய்ப்பு வசதிகளும் பாதிக்காத வகையில் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இளைஞர்கள், வாலிபர்கள், அரசு துறைகள், அரசு பள்ளிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அரசாணை எண்.56-ஐ திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிகைகளும் எடுக்கப்பட வில்லை.

    தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் உலை வைக்கும் அரசாணை 56-ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நாளை (15-ந்தேதி) மாலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Governmentworker #struggle

    Next Story
    ×