search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலன் அந்தோணி ஜெகன்- அனிதா
    X
    காதலன் அந்தோணி ஜெகன்- அனிதா

    கத்தியால் குத்தப்பட்ட கணவர் பரிதாப மரணம்- மனைவி, காதலன் மீது கொலை வழக்கு

    திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் கத்தியால் குத்தப்பட்ட என்ஜினீயர் பரிதாபமாக உயிரிந்தார். இதையடுத்து மனைவி, காதலன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது30). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.

    கடந்த 13-ந்தேதி மாலை இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது மர்ம வாலிபர் கதிரவனை கத்தியால் குத்தி விட்டு அனிதா அணிந்து இருந்த நகையை பறித்துச் சென்றார்.

    போலீசார் விசாரணையில் அனிதாவே தனது காதலனான அந்தோணி ஜெகனை ஏவி கணவரை தாக்கியது தெரிந்தது.

    அந்தோணி ஜெகன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் பதுங்கி இருந்த அந்தோணி ஜெகன் மற்றும் அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கதிரவன் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கதிரவனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கதிரவன் இறந்ததையடுத்து அவரது மனைவி அனிதா, காதலன் அந்தோணி ஜெகன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    அனிதா திருமணத்திற்கு முன்பே அந்தோணி ஜெகனை காதலித்தார். பெற்றோரின் வற்புறுத்தலால் என்ஜினீயர் கதிரவனை திருமணம் செய்தார். எனினும் அவர் மீது விருப்பம் இல்லாத அனிதா காதலன் அந்தோணி ஜெகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டார்.

    இதற்காக திருவான்மியூர் கடற்கரைக்கு கணவரை அழைத்து வந்து கண்ணை கட்டி கண்ணாம்மூச்சி ஆடி திட்டத்தை நிறைவேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

    திருமணம் ஆன நாள் முதலே அனிதா, கணவர் கதிரவனை தீர்த்து கட்ட முடிவு செய்தததாக தெரிகிறது. இந்த கொலை திட்டத்துக்கு வேறு யாரேனும் உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து சிறையில் உள்ள அனிதாவையும், காதலன் அந்தோணி ஜெகனையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளையும் வி‌ஷம் கொடுத்து கொன்றார். கணவரையும் வி‌ஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. தற்போது அனிதா, காதலனுக்காக கணவரை திட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×