search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மேகலா, திவ்யகலா மற்றும் தற்கொலை செய்துகொண்ட தந்தை வெங்கடேசன்
    X
    கொலை செய்யப்பட்ட மேகலா, திவ்யகலா மற்றும் தற்கொலை செய்துகொண்ட தந்தை வெங்கடேசன்

    வேலூர் அருகே 2 மகள்களை கொன்று தந்தை தற்கொலை

    வேலூர் அருகே தந்தையே தனது 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). டெய்லர். இவரது மனைவி கமலா (32). இவர்களுக்கு மேகலா (9). திவ்யகலா (7) என்ற 2 மகள்கள் இருந்தனர். அங்குள்ள அரசு பள்ளியில் மேகலா 4-ம் வகுப்பும், திவ்யகலா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாகவே வெங்கடேசன் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் குடும்ப நடத்துவதற்காக கமலா கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன் என்னால் குழந்தைகளை பார்த்து கொள்ள முடியாது.

    நீ வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த கமலா தனது 2 மகள்களையும் தாய் வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.

    மனைவியின் இந்த முடிவு வெங்கடேசனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை வழக்கம் போல் கமலா கீரை வியாபாரத்துக்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த வெங்கடேசன், தனது 2 மகள்களையும் கழுத்தை நெரித்து கொன்று கட்டிலில் படுக்க வைத்தார். உடனே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று மாலை வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த கமலா அங்கு கணவன் மற்றும் 2 மகள்களும் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

    உடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் இதுகுறித்த விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதரன் மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த வெங்கடேசன் மற்றும் அவரது 2 மகள்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×