search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி குற்றம்சாட்டிய பேராசிரியர் ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கியவர்- பரபரப்பு தகவல்கள்
    X

    மாணவி குற்றம்சாட்டிய பேராசிரியர் ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கியவர்- பரபரப்பு தகவல்கள்

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவி குற்றம்சாட்டிய பேராசிரியர் ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கியவர் என்பது தெரியவந்துள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருக்கும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 2 பேரும் தங்க பாண்டியனுக்கு சாதகமாக பேசிய ஒர்ஜினல் ஆடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் ஏ.டி.எஸ்.பி. வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.

    இந்த நிலையில், தனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. உண்மையை மறைக்க பார்க்கிறது. போலீஸ் விசாரணை மேம்போக்காக தன் மீதே பழி சுமத்துவதை போல் இருப்பதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக மனித உரிமை அமைப்பு, முதல்வரின் தனிப்பிரிவு, பெண்கள் ஆணையம், தாழ்த் தப்பட்டோர் ஆணையம் என பல்வேறு தரப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் மாணவி புகார் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய உதவி பேராசிரியர் தங்க பாண்டியனை பற்றி புதிய புகார்கள் பூதாகரமாக வெளியாகியுள்ளன. தங்கபாண்டியனின் பின்னணி குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

    அவர், ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியிலும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்டாமல் திருவண்ணாமலை கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்த பிறகும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

    இதே கல்லூரியில் பணியாற்றிய, வாணாபுரத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் பணியாளர் ஒருவரும் தங்கபாண்டியன் மீது ஏற்கனவே புகார் அளித்துள்ளார். கல்லூரி நிர்வாகம், தங்க பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.

    இதனால், அந்த பெண் பணியாளர் ‘ராஜினாமா’ கடிதம் கொடுத்து விட்டு வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த நிலையில், தற்போது சென்னை மாணவி கொடுத்த புகாரில் பேராசிரியர் தங்க பாண்டியன் சிக்கியுள்ளார்.

    மாணவி மீது திருட்டுபட்டம் கட்டி, பாலியல் புகாரை திசை மாற்ற முயற்சிப்பதாகவும் மாணவி தரப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். மாணவி தங்கியிருந்த விடுதியில் பெரும்பாலான அறைகளில் உள் தாழ்ப்பாள், வெளி தாழ்ப்பாள் இல்லை.

    இந்த விடுதியில் மொத்தம் 150 மாணவிகள் 72 அறைகளில் தங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான அறைகளில் தாழ்ப்பாள்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாணவி குற்றம் சாட்டுகிறார். பாலியல் புகார் கூறிய மாணவி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,127 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இவ்வளவு மதிப்பெண் பெற்ற மாணவி பென்சில், பேனா திருடினார் என்றால் எவராலும் ஏற்க முடியாத குற்றச்சாட்டாக இருக்கிறது.

    ஆனால், மாணவி கூறிய பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஏ.டி.எஸ்.பி. வனிதா விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டும் பேராசிரியைகள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் கல்லூரிக்கே நேரில் சென்று பேராசிரியைகளிடம் விளக்கம் கேட்டு விசாரித்து வருகின்றனர்.

    ஒரு புகாரில் சிக்கியவர்கள் மீது எப்.ஐ.ஆர். (முதல்தகவல் அறிக்கை) பதிவு செய்து கைது செய்தோ? அல்லது காவலில் வைத்து விசாரணை நடத்துவது தான் நடைமுறை. ஆனால், பேராசிரியர்கள் விவகாரத்தில் போலீசாரின் விசாரணை வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

    போலீசாரின் இது போன்ற விசாரணையால், மாணவிக்கு மிரட்டல் வருவதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பேராசிரியைகளிடம் வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் இன்றும் கல்லூரிக்கே சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவி கொடுத்த 6 நிமிட ஆடியோவை ஓட விட்டு பேராசிரியைகளிடம், அதுப்பற்றி கேள்வி எழுப்பினர். மாணவி புகாருக்கு பேராசிரியைகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மாணவி பாலியல் புகாரில் புதிய புதிய குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெளியாகி வருவதால், வேளாண்மை கல்லூரியில் நாள்தோறும் பரபரப்பு நீடிக்கிறது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் நிம்மதியிழந்து செயவதறியாமல் திகைப்பில் உள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege

    Next Story
    ×