search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி
    X
    கடல் போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மை நீர் ஆதாரமாக திகழ்கிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 784கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று குறைந்து 46.35 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 570 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் உள்ள 17 ‌ஷட்டர்களில் 3 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இந்த ‌ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டன. இந்த தண்ணீர் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள கடலில் கலக்கும்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பரங்கிப்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கிறது. எனவே வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து விட்டால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், தண்ணீர் தன்மை மாறும் என்று பொதுமக்கள் கூறினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் வெள்ளாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றார். #VeeranamLake
    Next Story
    ×