search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறை - பொள்ளாச்சி மலைபாதையில் மண் சரிவை சரிசெய்யும் ஊழியர்கள்.
    X
    வால்பாறை - பொள்ளாச்சி மலைபாதையில் மண் சரிவை சரிசெய்யும் ஊழியர்கள்.

    தொடரும் கனமழை - வால்பாறை, பொள்ளாச்சி சாலையில் மண் சரிவு

    வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவுக்கும் 37 வது கொண்டை ஊசி வளைவுக்கும் இடையே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வால்பாறை:

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

    கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரண மாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைகள், குளங்கள், ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

    குறிப்பாக ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கோவையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் ரெயின்கோர்ட்டு அணிந்தும், குடைபிடித்த படியும் வந்தனர்.

    நீலகிரி மாவட்டம் அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அந்த தண்ணீர் முழுவதும் அணையின் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதும் ஊட்டியில் மழை கொட்டி வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையிலிருந்து குரங்குமுடி எஸ்டேட் செல்லும் சாலையில் மாணிக்கா எஸ்டேட் பிரிவு அருகே 60 ஆண்டு பழமை வாய்ந்த தைல மரம் சாய்ந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் தெரிய வந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்துவந்து 4 மணிநேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவுக்கும் 37 வது கொண்டை ஊசி வளைவுக்கும் இடையே மண்சரிவு ஏற்பட்டு மண்முழுவதும் சாலையில் மரங்களுடன் சேர்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை பொள்ளாச்சி கொண்டு செல்வதற்கு கொண்டுவந்தனர். மண்சரிவு காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் செல்லமுடியாமல் நடுவழியில் நின்றது.

    2 மணிநேரத்திற்கு பிறகு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 மணிநேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது.

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

    வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார்அணையில் 114 மி.மீ. மழையும், வால்பாறையில் 108 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 188 மி.மீ. மழையும்,நீராரில் 104 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    சோலையார் அணைக்கு விநாடிக்கு 8689.70 கனஅடி தண்ணீர் வந்து வந்துகொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து சேடல் பாதை வழியாக 4758.45 கனஅடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    சோலையார் அணையிலிருந்து மாற்றுப்பாதை வழியாக 2041.32 கன அடித்தண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு 602.08 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் 164.70 அடியை எட்டியதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு நலன்கருதி நள்ளிரவு 1 மணியளவில் சோலையார் அணை 2-வது முறையாக திறக்கப்பட்டு மதகு வழியாக 253.13 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டுவருகிறது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வர் கோவில் உள்ளது.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதி யில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவியில் தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மேலும் நேற்று மாலை முதல் காட்டாற்று வெள்ளம் கோவில் வளாகத்தை சூழ்ந்ததால் கோவிலில் சாமி தரிசனத்திற்கும், பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அறநிலையத்துறை, மற்றும் வனத்துறையினர் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×