search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை இளம்பெண் எரித்துக் கொலை- காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    சென்னை இளம்பெண் எரித்துக் கொலை- காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு

    ராமநாதபுரம் அருகே சென்னை இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் மாலதி (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்தார். பின்னர் சென்னையிலேயே தனது தந்தையுடன் தங்கி வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில் மாலதி கடந்த மாதம் ஊருக்கு சென்றார். அதன்பின்பு அவர் சென்னை திரும்பவில்லை. அவரின் செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. தன் மகள் மாயமானது குறித்து போலீசில் வீரபாண்டி புகார் செய்தார்.

    இதனிடையே 13-ந் தேதி உத்தரகோசமங்கை அருகே கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது எலும்புக்கூடாக கிடந்தது மாலதி என்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் மாலதி, கருங்குளத்தை சேர்ந்த சிவக்குமாருடன் செல்போனில் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. சிவக்குமார் ஆன்-லைனில் பொருட்களை விற்பனை செய்பவர் என்பதும், ரெயிலில் சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் தெரிந்தது. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள சிவக்குமார் அதை மறைத்து மாலதியிடம் பழகி வந்துள்ளார்.

    இதை அறிந்த மாலதி கடந்த மாதம் 24-ந் தேதி ஊருக்கு வந்து காதலன் சிவக்குமாரிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மாலதி வற்புறுத்தியுள்ளார். இதனால் சிவக்குமார், மாலதியை கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மாலதி காணாமல் போன சமயத்தில் போலீசார் விசாரணைக்கு வந்த சிவக்குமார், மாலதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை அழைத்து வருவதாக போலீசாரிடம் உறுதி அளித்துவிட்டு தலைமறைவானார்.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறுகையில், “சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சிவக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை வலைவீசி தேடி வருகிறோம். தற்போதைய நிலையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணையின் அடிப்படையில் வழக்கு மாற்றப்படும்” என்றார். #tamilnews
    Next Story
    ×