search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காது- இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை
    X

    உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காது- இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை

    சரியாக விளையாடாத வீரர்களுக்கு உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காது என பயிற்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #WorldCup2019
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    ஐந்தாவது போட்டியில் இலங்கை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிக்வெல்லா (95), சமரவிக்ரமா (54), சண்டிமல் (80), குசால் மெண்டிஸ் (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது.

    மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு 26.1 ஓவரில் 352 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஸ்கோரை எட்டுவது முடியாத காரியம் என்றாலும், இங்கிலாந்து சிறப்பாக விளையாடி கவுரவமான ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 219 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இங்கிலாந்து ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை.

    அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால் அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை வெல்ல விரும்புகிறது. அதற்கேற்றபடி இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியும் விளையாடி வருகிறது.



    இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசனையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான டிரெவர் பெய்லிஸ் ‘‘இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால், உலகக்கோப்பைக்கான அணியில் இருக்கமாட்டார்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மோர்கன், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் குர்ரான், ரஷித், பிளங்கெட், பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், வுட், டேவிட் வில்லே போன்றோர் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×