search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை தடுத்தாலும், பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது - அமித் ஷா பதிலடி
    X

    என்னை தடுத்தாலும், பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது - அமித் ஷா பதிலடி

    மேற்கு வங்காளத்தில் நான் கூட்டங்களில் கலந்து கொள்வதை தடுத்தாலும், பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது என்று அமித் ஷா கூறினார்.
    ஜாதவ்பூரில் அவரது கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அமித் ஷா பேசியதாவது:-

    யாராவது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தால் மம்தா பானர்ஜி கோபப்படுகிறார். இப்போது நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும். நான் நாளை கொல்கத்தாவில்தான் இருப்பேன்.

    மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் இருக்கிறது. என்னை கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று மம்தா அரசு நினைப்பதாக தோன்றுகிறது. என்னை தடுக்கலாம். ஆனால், இந்த மாநிலத்தில் பா.ஜனதாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியாது.

    வங்காளதேசத்தில் இருந்து இங்கு ஊடுருவியவர்கள் கரையான் போன்றவர்கள். அவர்கள் நாட்டின் வளங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை வெளியேற்றுவோம்.

    ஆனால், மம்தா பானர்ஜியோ அவர்களை தனது ஓட்டு வங்கியாக கருதுகிறார். அந்த ஓட்டு வங்கியால் கூட அவரது தோல்வியை தடுக்க முடியாது. தங்க வங்காளத்தை ஏழை வங்காளமாக மாற்றி விட்டார், மம்தா.

    மேற்கு வங்காளத்தில் சிண்டிகேட் ராஜ்யத்தை மம்தா நடத்தி வருகிறார். அவருடைய மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நலனுக்காக திரிணாமுல் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. முன்பு, சிண்டிகேட் வரி இருந்தது. தற்போது, மருமகன் வரியாக மாறிவிட்டது. இந்த அத்தை-மருமகன் ஊழல் அரசை நாம் தூக்கி எறிய வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், அமித் ஷா இதுவரை 301 தொகுதிகளில் பிரசாரம் செய்திருப்பதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அவர் மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்திருப்பதாகவும் கூறினர்.

    இதற்கிடையே, ஜாதவ்பூரில் அமித் ஷா பங்கேற்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தாங்கள் காரணம் அல்ல என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. கூட்டத்துக்கு போதிய ஆட்கள் வரமாட்டார்கள் என்ற அச்சத்தில் பா.ஜனதாவே ரத்து செய்து விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறினார்.
    Next Story
    ×