search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் தள்ளிப்போகும் திருமணம்
    X

    இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் தள்ளிப்போகும் திருமணம்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் ராஜஸ்தானை சேர்ந்த மணமகனுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த மணமகளும் இடையே நடப்பதாக இருந்த திருமணம் தள்ளி போனது. #IndianPakistaniCouple #PostponeMarriage
    பார்மர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள கேஜ்கா பார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மகேந்திர சிங்(வயது 23). இவருக்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் அமர்கோட் மாவட்டத்தில் சினோய் கிராமத்தில் வசிக்கும் மணமகள் சாஹன் கன்வருக்கும் திருமணம் செய்வது என சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்த திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது.

    இதற்காக மணமகனும் அவருடைய குடும்பத்தினரும் பாகிஸ்தான் செல்ல ரெயில் டிக்கெட் எடுத்து இருந்தனர். ஆனால் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யவேண்டியதாகி விட்டது.

    இதுபற்றி பாகிஸ்தானில் உள்ள மணமகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகன் தரப்பினர் தங்களது இயலாத சூழ்நிலையை தெரிவித்து திருமணத்தை சில வாரங்கள் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர். இதை பாகிஸ்தான் தரப்பில் மணமகள் வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதுபற்றி மகேந்திர சிங் நம்பிக்கையுடன் கூறும்போது, எல்லையில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியதும் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறி இருக்கிறோம். “பாகிஸ்தான் செல்வதற்காக 3 மாதங்களுக்கு முன்பே விசாவும் எடுத்து வைத்துவிட்டோம். ஆனால் எல்லையில் இப்படி பதற்றமான நிலை ஏற்படும் என்று நினைக்கவில்லை. திருமணம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட இன்னும் சில வாரங்களில் எனது வருங்கால மனைவியை கைபிடிப்பேன்” என்றார்.
    Next Story
    ×