search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது- மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது
    X

    அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது- மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது

    விசா மோசடி செய்து படிக்க வந்ததாக அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களை அளித்து அமெரிக்காவுக்கு மாணவர்கள் வருவதாகவும், கல்வி விசா பெற்று இப்படி வருபவர்களில் பலர் பின்னர் வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க தொடங்கி அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறி விடுவதாகவும் அந்நாட்டின் குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 49 ஆயிரத்து 763 மாணவர்கள் இந்தியாவில் இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதே ஆண்டில் சீனாவில் இருந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 106 ஆக இருந்தது.

    இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக டெட்ராய்ட் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறி’ வைக்கப்பட்டது. இதில் சுமார் 130 மாணவர்கள் சிக்கினார்கள். இவர்களில் 129 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் 130 பேரும் அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.



    இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசியல் ரீதியான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.

    இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘விசா மோசடி மூலம் மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த இடைத்தரகர்களையும் தற்போது கைதாகியுள்ள இந்திய மாணவர்களையும் அமெரிக்க அரசு ஒரேமாதிரியாக பார்க்க கூடாது.

    இந்திய மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கைதாகியுள்ள மாணவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள 202-322-1190 மற்றும் 202-340-2590 எண்களை கொண்ட ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    Next Story
    ×