search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் - ராகுல் தாக்கு
    X

    சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் - ராகுல் தாக்கு

    சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார். #ChandrasekharaRao #RahulGandhi
    ஐதராபாத்:

    மாநிலத்தை தங்கமாக மாற்றுவார் என மக்கள் கனவு கண்டால், சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார்.

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற உத்வேகத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும், தெலுங்குதேசம் கட்சியும் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி, அவருக்கு சரியான போட்டியாக அமைந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியைப் பிடிக்க ஆர்வமாக உள்ளது.

    இந்த நிலையில் அங்கு கத்வால் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா பணக்கார மாநிலமாக இருந்தது. இப்போது அது கடன்களின் பிடியில் தவிக்கிறது. மாநிலத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது. ஆனால் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பத்தினர் சொத்துகளோ உயர்ந்து கொண்டே போகிறது.

    30 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பேருக்கு இந்த ஆட்சியில் வேலை கிடைத்தது? விவசாயிகள், மலைவாழ் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது.

    வீடு இல்லாதவர்களுக்கு 2 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்படி மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

    குடிநீர், வளங்கள், வேலை வாய்ப்புகள் என எல்லாவற்றையும் பெற்ற தங்கமான மாநிலமாக தங்கள் மாநிலம் மாறும் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பம்தான் தங்கமான (பணக்கார) குடும்பமாக மாறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல் காந்தி, தெலுங்கானா தேர்தலையொட்டி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகியவை பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு அணி (‘பி’ டீம்), சந்திரசேகரராவ் பிரதமர் மோடியின் தெலுங்கானா ரப்பர் ஸ்டாம்ப்” என தாக்கி உள்ளார்.

    இதே போன்று மராட்டிய மாநிலத்தில் சஞ்சய் சாத்தே என்ற விவசாயி சாகுபடி செய்த 750 கிலோ வெங்காயத்துக்கு வெறும் ரூ.1,064 தான் கிடைத்து, அந்த பணத்தை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளதை தொடர்புபடுத்தி மற்றொரு பதிவில் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    அதில் அவர், “பிரதமர் மோடி 2 இந்தியாக்களை கட்டமைத்து கொண்டிருக்கிறார். ஒரு இந்தியாவில், ரபேல் விமான பேரத்தில், எதுவும் செய்யாத, விமானத்தை தயாரிக்காத அனில் அம்பானிக்கு அவர் ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை வழங்கி உள்ளார். மற்றொரு இந்தியாவில், நாசிக் விவசாயிக்கு 4 மாத உழைப்பில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,040 கிடைத்துள்ளது” என கூறி உள்ளார். #ChandrasekharaRao #RahulGandhi 
    Next Story
    ×