search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு- ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மனு தள்ளுபடி
    X

    டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு- ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மனு தள்ளுபடி

    டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விவரங்களை காவல்துறை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு தடை கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiChiefSecretary #AAPMLAs
    புதுடெல்லி:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.

    தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார், பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

    இதையடுத்து குற்றப்பத்திரிகை விவரங்களை ஊடகங்களுக்கு காவல்துறை தெரிவிப்பதை தடுக்கக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாட்டியாலா கோர்ட்டில் தனியாக மனு தாக்கல் செய்தனர்.


    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி தலைவர்கள் காவல்துறையினரைப் பற்றி மோசமாக பேசுவதாகவும், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும் நடந்துகொள்வதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி வழக்கறிஞர் மறுத்தார். வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து அவமதிப்பதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு முடிவு செய்வதாக கூறினார்.

    பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற்றபோது, காவல்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், வரும் செப்டம்பர் 18-ம் தேதி குற்றப்பத்திரிகை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது. #DelhiChiefSecretary #AAPMLAs
    Next Story
    ×