search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு
    X

    பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு

    பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளை ஆகஸ்ட் 22-லிருந்து 23-ம் தேதிக்கு முன்னர் மாற்றிய மத்திய அரசு தற்போது மீண்டும் 22-ம் தேதிக்கு மாற்றி விடுமுறை அறிவித்துள்ளது. #Bakridholiday #Delhigovtoffices
    புதுடெல்லி:

    இறைவனே எல்லாம், அவருக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு, இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.

    ஈதுல் அதா என்றும் அழைக்கப்படும் இந்த பக்ரீத் திருநாளின்போது இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் வழியில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை ‘குர்பானி’ என்ற புனிதப்பலி தந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுவது வழக்கம்.

    அவ்வகையில்,  இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை (அராபிய துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையன்று) இந்தியாவில் 22-8-2018 அன்று கொண்டாட தலைமை இமாம்கள் முடிவு செய்திருந்தனர்.

    இதற்கிடையில், மத்திய வேலையளிப்பு மற்றும் பயிற்சி துறை சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில்‘பக்ரீத் பண்டிகையையொட்டி, டெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களுக்கு (22-ம் தேதிக்கு பதிலாக) 23-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டு கொண்டாடும் நாளை தேதியை 23-ம் தேதிக்கு மாற்றிய மத்திய அரசு தற்போது மீண்டும் 22-ம் தேதிக்கு மாற்றி  விடுமுறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வேலையளிப்பு மற்றும் பயிற்சி துறை இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில், 'நாட்டின் பல நகரங்களில் இம்மாதத்தின் முதல்பிறை தோன்றிய காட்சிகளின் அடிப்படையிலும், டெல்லி ஜாமா மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தலைமையிலான பிறை நிர்ணயக்குழுவான ‘ருயத் ஹிலால்’ அளித்த அறிக்கையின் அடிப்படையிலும் பக்ரீத்  பண்டிகையையொட்டி, டெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களுக்கு 22-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bakridholiday #Delhigovtoffices  
    Next Story
    ×