search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோம் கொலோசியத்தை செருப்பு கம்பெனி பராமரிக்கையில் தாஜ்மகாலுக்கு என்ன?- மத்திய மந்திரி சர்ச்சை கருத்து
    X

    ரோம் கொலோசியத்தை செருப்பு கம்பெனி பராமரிக்கையில் தாஜ்மகாலுக்கு என்ன?- மத்திய மந்திரி சர்ச்சை கருத்து

    ரோம் நகரில் உள்ள கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரிக்கும் போது, தாஜ்மகாலை தனியார் வசம் ஒப்படைப்பதில் என்ன தவறு என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ் பேசியுள்ளார். #TajMahal #KJAlphons
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுமார் 95 நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்றாகும்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ், இந்த திட்டத்தின் மூலம் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களை பராமரிக்கவும், விரிவுபடுத்தி பாதுகாக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய சுற்றுலாத்துறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.



    மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியை தனியார் சிமெண்ட் நிறுவனம் பராமரித்து வருவதை மேற்கோள் காட்டிய மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்ஸ், இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திருநாட்டின் அடையாளமாக விளங்கும் நினைவுச் சின்னங்களை வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த திட்டத்துக்கு கண்டனங்களும் வலுக்கத் துவங்கியுள்ளது.

    சமீபத்தில் தாஜ்மகாலை பராமரிப்பதில் உத்தரப்பிரதேச அரசு முறையாக செயல்படவில்லை எனவும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான எந்தவித திட்டமும் மாநில அரசிடம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TajMahal #KJAlphons
    Next Story
    ×