search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில தலைவர் நியமன பிரச்சினை - அமித்ஷா- வசுந்தரா மோதல்
    X

    மாநில தலைவர் நியமன பிரச்சினை - அமித்ஷா- வசுந்தரா மோதல்

    மாநில பாரதிய ஜனதா தலைவர் பதவி நியமனத்தில் அமித்ஷாவுக்கும், வசுந்தராராஜேவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. #Vasundhara #AmitShah

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. வசுந்தராராஜே முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

    அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா போராடி வருகிறது.

    ஆனால், சமீபகாலமாக மாநில அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அங்கு நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது.

    சமீபத்தில் 3 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில பாரதிய ஜனதா தலைவர் அசோக் பர்னாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் பதவி விலகி 2 மாதமாகியும் இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. புதிய தலைவர் நியமனம் குறித்து கட்சி மேலிட தலைவர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    இது சம்பந்தமாக டெல்லி சென்றிருந்த வசுந்தராராஜே அகில இந்திய தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    மாநில தலைவராக மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத்தை நியமனம் செய்ய அகில இந்திய தலைவர் அமித்ஷா முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஆனால்,இந்த நியமனம் வசுந்தராராஜேவுக்கு பிடிக்க வில்லை. வேறு நபரை நியமிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தி வருகிறார். ஆனால், கஜேந்திரசிங் செகாவத்தையே நியமிப்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார்.

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர். அதே போல் கஜேந்திரசிங் செகாவத்தும் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    தனது சமூகத்தை சேர்ந்த வரையே இப்போது மாநில தலைவர் ஆக்கி விட்டால் தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்-மந்திரியை தேர்ந்து எடுக்கும் போது, அதே சமூகத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.

    அதாவது ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாநில தலைவர் மற்றும் முதல்-மந்திரி பதவிகள் வழங்கப்பட்டால் அது பிரச்சினையை ஏற்படுத்தும்.

    எனவே, முதல்-மந்திரியாக வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் மீண்டும் தன்னை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய மாட்டார்கள் என வசுந்தராராஜே பயப்படுகிறார்.

    இதனால்தான் கஜேந்திரசிங் செகாவத்தின் நியமனத்தை வசுந்தராராஜே எதிர்க்கிறார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.

    அவர்களுக்கு ராஜபுத்திர சமூகத்தினரை பிடிக்காது. எனவே, ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவரை தலைவர் ஆக்கினால் ஜாட் சமூகத்தினர் கோபத்துக்கு ஆளாக கூடும் என வசுந்தரா ராஜே கருதுகிறார்.

    இதனால் ராஜபுத்திரரும் அல்லாத, ஜாட் சமூகத்தினரும் அல்லாத வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாநில தலைவர் ஆக்க வேண்டும் என்று வசுந்தராராஜே கூறி வருகிறார். ஆனால், இதை அமித்ஷா ஏற்கவில்லை.

    அப்படியே கஜேந்திரசிங் செகாவத்தை தலைவராக நியமிப்பதாக இருந்தால் முன்கூட்டியே தன்னை மீண்டும் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வசுந்தரா ராஜே நிபந்தனை விதிக்கிறார். இதையும் அமித்ஷா ஏற்கவில்லை.

    இதனால் அமித்ஷாவுக்கும், வசுந்தராராஜேவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் கட்சியை நடத்தி வந்த காலத்தில் வசுந்தராராஜேவுக்கு பாரதிய ஜனதா மேலிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது. அவர் நினைத்தவர்தான் மாநில தலைவர்கள் நிர்வாகிகள் ஆக முடியும் என்ற நிலை இருந்தது.


    ஆனால், நரேந்திர மோடி, அமித்ஷா கைகளுக்கு கட்சி வந்த பிறகு வசுந்தராராஜே செல்வாக்கு அவர்களிடம் எடுபடவில்லை.

    மேலும் வசுந்தராராஜே செயல்பாட்டால் மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.

    எனவே, வசுந்தராராஜே பேச்சுக்கு இப்போது மேலிடத்தில் மதிப்பு இல்லை.

    இதனால் வசுந்தராராஜேவின் ஆலோசனையை மீறி வேறு நபர்தான் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வசுந்தராராஜே மெல்ல, மெல்ல ஓரங்கட்டப்படலாம். அடுத்த சட்டசபை தேர்தலில் கூட வேறு நபரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்துடன் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இதில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டார்கள்.

    ஆனால், ராஜஸ்தானில் முதல்-மந்திரியுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இன்னும் தேர்தல் பணிகளை கூட பாரதிய ஜனதா மேலிடம் தொடங்கவில்லை. #Vasundhara #AmitShah

    Next Story
    ×