search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
    X

    மீஞ்சூர் அருகே வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

    மீஞ்சூர் அருகே நகை கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த ஹேமசந்திரா நகரைச் சேர்ந்தவர் கமல். நகை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 60 சவரன் நகை, ரூ. 15 ஆயிரம், ¼ கிலோ வெள்ளி திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கமல் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைபோவது குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திருநின்றவூர் அடுத்த செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்.திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இன்று காலை கடையின் ஷெட்டர் பாதி திறந்து கிடந்தது. இது பற்றி ஸ்ரீனிவாசனுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கடைக்கு வந்து உள்ளே சென்ற பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் குடும்பத்துடன் செய்யாறில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 21 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×