search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு செல்லாத தலைமை ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்டு
    X

    கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு செல்லாத தலைமை ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

    கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் பள்ளிகளுக்கு வராத 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு திறன் குறைவாக உள்ள பள்ளிகளில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் வெதூர் மற்றும் விளாநெல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த 2 பள்ளிகளும் பல நாட்களாக மூடப்பட்டிருப்பதும், வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் விளாநெல்லி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் ஆகியோர் பள்ளிக்கு வராமல் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மாணவர்களை சேர்க்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

    அப்பகுதி மக்களும் இந்த பள்ளிகளுக்கு தலைமைஆசிரியர்கள் வரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளாநெல்லி பள்ளி தலைமைஆசிரியர் ராஜாராம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு குடிமுறை அரசு பணிகள் விதிப்படி 2 தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்து கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா உத்தரவிட்டார்.
    Next Story
    ×