search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு
    X

    சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

    சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தொடங்கிவைக்கிறார். #EdappadiPalanisamy #GlobalInvestorsMeet2019
    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக கடந்த ஓராண்டு காலமாகவே ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

    வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்று முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மாநாட்டை விளக்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 முறை அமைச்சரவையும் கூடி முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதியும், 2-வது அமைச்சரவை கூட்டம் இம்மாதம் 3-ந் தேதியும் நடந்து முடிந்த நிலையில், 30 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.



    இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 18-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை கூட்டத்தில் மேலும் 11 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டதுடன், கூடுதலாக ரூ.22 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

    இந்த நிலையில், 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். மதியம் 2 மணி முதல் பல்வேறு தலைப்புகளின் கீழ் துறை சார்ந்த கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன.

    2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கருத்தரங்கங்களுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார். சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. சுமார் ரூ.2½ லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என தெரிகிறது.  #EdappadiPalanisamy #GlobalInvestorsMeet2019
    Next Story
    ×