search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    ஊத்தங்கரை அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மனைவியை தாக்கி 16 பவுன் நகை கொள்ளை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மனைவியை தாக்கி 16 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியப்பன். ஓய்வு பெற்ற காவலரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சின்னகன்னி (வயது65). இவருக்கு அன்பரசு (47), ராஜசேகர்(42) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் அன்பரசு கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் தாயுடன் வசித்து வருகிறார்.

    ராஜசேகர் சென்னையில் உள்ள ஒரு மத்திய அரசு பணியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சென்னையிலேயே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி வீட்டில் சின்னகன்னி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரிடம் தங்கள் மகன் அன்பரசுக்கு பணி நிரந்தரமாகி விட்டது. இதற்காக அவரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு வேண்டும் என்று கூறினார்.

    ஆனால், சின்னகன்னிக்கு சந்தேகம் எழுந்ததால் எனது மகன் அன்பரசு சொன்னால் தான் தருவேன் என்று கூறி செல்போனில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

    உடனே அந்த மர்ம நபரும் அன்பரசிடம் பேசுவது போல் நடித்தார். மீண்டும் அன்பரசின் அடையாள அட்டைகளை தருமாறு சின்னகன்னியிடம் கேட்டார். ஆனால் அவர் தரமறுத்தார். உடனே அந்த வாலிபர் சின்னகன்னியை தாக்கி கீழே தள்ளிவிட்டார். அவர் அங்கேயே கீழே விழுந்து மயங்கினார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட அந்த மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 16 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    சின்னகன்னி மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அவரை மீட்டனர். அப்போது நடந்த சம்பவத்தை பற்றி தனது மகன் அன்பரசனிடம் தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து அன்பரசன் ஊத்தங்கரை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் கொள்ளை சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும வழக்குக்கூட பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

    அன்பரசன் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

    உடனே நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து உத்தரவிட்டதை தொடர்ந்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பரசனின் தாயார் சின்னகன்னியை தாக்கிவிட்டு வீட்டிற்குள் புகுந்து 16 பவுன், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×