search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள்
    X

    தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள்

    அடுத்த கல்வி ஆண்டில் (2019-20) கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வித்துறை இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார். #MBBS #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 2900 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன.

    இந்த ஆண்டு கரூரில் புதியதாக அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்குகிறது. கல்லூரிக்கான கட்டுமானங்கள் முடிவடைந்து தற்போது பணியாற்ற வேண்டிய டாக்டர்கள் நியமனம் நடந்து வருகிறது.

    இந்த கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும். இத்துடன் மதுரை, திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள இடங்களை விட கூடுதலாக 100 இடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி கூடுதல் இடங்கள் சேர்ந்து மொத்தம் 350 இடங்கள் அடுத்த கல்வியாண்டில் கூடுதலாக கிடைக்கும்.

    அதன்படி 2019-20ம் கல்வி ஆண்டில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வித்துறை இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.

    ஏற்கனவே உள்ள 2900 இடங்களுடன், 350 இடங்கள் அதிகரிப்பதால் இனி மருத்துவ கல்லூரிகளின் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3250 ஆக இருக்கும்.



    இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, கடந்த காலங்களில் மருத்துவ கல்லூரிகளை 100 இடங்களுடன் மட்டுமே ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள் பெறப்பட்டது. இனி புதிதாக தொடங்கப்படும் அனைத்து கல்லூரிகளிலும் 150 இடங்கள் இருக்கும் வகையில் தொடங்கப்படும் என்று கூறினார்.

    அடுத்ததாக பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி இடங்களையும் 250 ஆக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், மத்திய மருத்துவ கவுன்சிலின் வழி காட்டுதலின்படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் உயர் மருத்துவ படிப்புகள் தொடங்க இருப்பதாகவும், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலை போக்குவரத்து துறை சார்பில் மருத்துவ கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கல்லூரியை போக்குவரத்து துறை நடத்த முடியாத நிலை இருப்பதால் சுகாதாரத்துறையிடம் கல்லூரியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த கல்வி ஆண்டு முதல் அந்த கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MBBS #TN
    Next Story
    ×