search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய மழை -  புயல் நிவாரண பணிகள் பாதிப்பு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய மழை - புயல் நிவாரண பணிகள் பாதிப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மழை காரணமாக நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    அறந்தாங்கி:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை , அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடை விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. சிதலமடைந்த சாலை பகுதிகள் சகதியாக மாறியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. குடிசை வீடுகள் சேதமானதால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். மின்சாரம், குடி நீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையால் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மின்கம்பங்கள் சீரமைப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    மழை பெய்து கொண்டிருந்த போதிலும் மின் ஊழியர்கள் அதனை பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடர்ந்தனர். ஆனாலும் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அந்த பகுதிகளுக்கு மின் கம்பங்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பெய்த மழையாலும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    புயலால் சேதமடைந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பொதுமக்கள் தொடர்ந்து தங்கியிருந்து வருகின்றனர். வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகியதால் அவர்கள் கடும் அவ திக்குள்ளாகினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    புதுக்கோட்டை-30, ஆலங்குடி-34, கந்தர்வக்கோட்டை-7, கறம்பக்குடி-29, திருமயம்-16.20, அறந்தாங்கி -22.40, ஆவுடையார்கோவில் -26.40, மணல்மேல்குடி-39, இலுப்பூர்-62, குளத்தூர்-7.60, பொன்னமராவதி-15.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 288.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். கஜா புயலில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமாகின.

    50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காணாமல் போயின. சேதமான மற்றும் காணாமல் விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு இன்னும் விசைப்படகு மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்கள் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். தற்போது அந்த மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விற்பனை பாதிக்கும் என்பதால் கடலுக்கு இன்னும் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். நாளை முதல் அவர்கள் மீண்டும் மீன் பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×