search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் கோவிலில் 2வது கட்டமாக தொல்லியல் துறையினர் ஆய்வு
    X

    திருவாரூர் கோவிலில் 2வது கட்டமாக தொல்லியல் துறையினர் ஆய்வு

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று 2-வது கட்டமாக சிலை கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple
    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோவில்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் பிரிவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் 4,359 -க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் திருவாரூர் , தஞ்சாவூர் , நாகப்பட்டினம், கடலூர். மாவட்டங்களில் உள்ள 626 சிறிய கோவில்களுக்குரிய ஐம்பொன் சிலைகள் ஆகும்.

    இந்தநிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் கடந்த 21-ந் தேதி முதல் ஆய்வு நடைபெற்றது.

    இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று 2-வது கட்டமாக சிலை கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கோவிலில் உள்ள பழங்கால சிலைகள், கற்தூண்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கோவில் ஆவணங்களில் உள்ளப்படி சிலைகள் உள்ளதா? என்று நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன்படி இன்று காலை சிலைகள் கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் , தொல்லியல் துறை மண்டல இணை இயக்குனர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழுவினர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று நடைபெற்று வரும் சிலைகள் ஆய்வை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பார்வையிட்டார்.

    முன்னதாக நேற்று தஞ்சை மாவட்டம் அய்யம் துறை கிராமத்தில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தயாநிதீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.

    தனது மெய்க் காவலர்களுடன் தனியாக வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோவிலின் உள்ளே சென்று வெளியாட்கள் யாரும் உள்ளே வராதபடி கதவுகளை சாத்த உத்தரவிட்டார். இதையடுத்து கோவிலின் பாதுகாப்பு அறையில் உள்ள உலோகம் மற்றும் கல் சிலைகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் கோவில் குருக்கள் ராஜிவிடம் பாதுகாப்பாக உள்ள சிலைகள் பற்றி விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கிராம மக்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து இந்த கோவிலின் பழமை பற்றியும் அதில் தற்போது ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்றும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பொது மக்களிடம் பேசியதாவது:-

    தினமும் பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் கோவிலில் உள்ள சுவாமி சிலைகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார்.

    பிறகு கோவில் ஊழியர்களிடம் பேசிய அவர், இந்த கோவில் சிலைகள் பாதுகாப்பாக உள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்புடன் சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். #ArchaeologyDepartment #Tiruvarurtemple
    Next Story
    ×