search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே விராலிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாயக்கன்பட்டி கிராமத்தின் நுழைவு பகுதியில் பெரியாறு கால்வாயும், ஊரைத் தாண்டி வைகை ஆறும் உள்ளது.

    கடந்த 3 மாதங்களாக கன மழை காரணமாக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கால்வாய் மற்றும் வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் ராமநாயக்கன்பட்டி பகுதிக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இப்பகுதி மக்களுக்கு 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அவை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    அப்பகுதி கிராம மக்கள் ஆண்டிப்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    அதன்பின்பு பி.டி.ஓ. விஜயசந்திரிகா மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான வத்தலக்குண்டு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×