search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணமான ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி கொடுக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அன்றே பணப்பலனை முழுமையாக வழங்க வேண்டும். 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். ரிசர்வ் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். விடுப்பு சம்பளம், டி.ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கிளை முன்பு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் துணை தலைவர் சிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கிளை செயலாளர் நடராஜ், அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் கலியபெருமாள் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×