search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்தது- 5 பேர் காயம்
    X

    கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்தது- 5 பேர் காயம்

    கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    கோத்தகிரி:

    சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 21 பேர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் கோத்தகிரி வழியாக சென்னை புறப்பட்டனர். வேனை டிரைவர் சுரேஷ்குமார் (36) ஓட்டி வந்தார்.

    இந்த வேன் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மேல் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குறுகிய வளைவில் திரும்பும் போது டிரைவர் பிரேக் போட முயன்றார். அப்போது வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் சுரேஷ் குமார், சீனிவாசன், ராமு, பாலா, நாகேந்திரன் ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களை அப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சீனிவாசன், ராமு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×