search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் படிக்கட்டில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தவறி விழுந்து பலி
    X

    பஸ் படிக்கட்டில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தவறி விழுந்து பலி

    மரக்காணம் அருகே பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தவறி விழுந்து பலியானார்.

    மரக்காணம்:

    சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது உறவினர் வீட்டின் திருமணம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள கணபதி நேற்று காலை மரக்காணம் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் சென்னை செல்வதற்காக மரக்காணம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து சென்னை பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கணபதிக்கு இருக்கையில் இடம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டே பயணம் செய்தார்.

    அந்த பஸ் நாரவாக்கம் என்ற இடத்தில் சென்ற போது படிக்கட்டில் பயணம் செய்த கணபதி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணபதியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கணபதியின் அண்ணன் பாண்டுரங்கன் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் இறந்த கணபதிக்கு வளர்மதி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    Next Story
    ×