search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஊட்டி:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் கோடை சீசனுக்கு பின்னர் மலைகளின் அரசியான ஊட்டி 2-வது சீசனில் களை கட்டி உள்ளது.

    நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு 2-வது சீசனை முன்னிட்டு 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கியதை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். மேலும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர். பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள செல்பி ஸ்பாட்டில், அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டு மலர் பூந்தொட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. தொடர் விடுமுறையையொட்டி அந்த மாளிகை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அங்கிருந்த மலர்களை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்குள்ள காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, அணைகள் போன்றவற்றை தொலைநோக்கி மூலம் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    தொடர் விடுமுறை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு வருகை தந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்ட படி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றதை காண முடிந்தது. ஊட்டியில் முக்கிய சந்திப்பான சேரிங்கிராஸ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 
    Next Story
    ×