search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
    X

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி, பழுது காரணமாக 2 உலைகளிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அதன்படி முதலாவது அணுஉலை கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை.

    2-வது அணுஉலையில் மட்டும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த அணுஉலையும் கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி பராமரிப்பு பணிக்காக திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த அணுஉலை 26-ந்தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தொடக்கத்தில் 300 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் ஆயிரம் மெகா வாட் மின்உற்பத்தியை எட்டியது. தொடர்ந்து 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பழுது ஏற்பட்டது.

    இதனால் அந்த அணுஉலை உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 2 அணுஉலைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மின்தடை அபாயம் ஏற்பட்டுள்ளதால் 2-வது அணுஉலை பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஓரிரு நாளில் அது சரி செய்யப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×