search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    48 வார்டுகளை கண்காணிக்க 225 பணியாளர்கள் நியமனம்- கலெக்டர் அன்பழகன்
    X

    48 வார்டுகளை கண்காணிக்க 225 பணியாளர்கள் நியமனம்- கலெக்டர் அன்பழகன்

    கரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து 48 வார்டுகளை கண்காணிக்க 225 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் பற்றியும், எவ்வாறு அவை பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வீடு, வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஊரக பகுதிகளுக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும், குறு வட்ட அளவிலும் வார்டு வாரியாகவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு வராமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் நிரந்தர பணியாளர்களும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தினக்கூலி அடிப்படையில் 225 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு நாளைக்கு 11,250 வீடுகளில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள். இப்பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாகப் பயன்படுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்கின்றனர். நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளித்தும், மருந்துகள் தெளித்தும் வருகின்றனர்.

    நீரை முறையாக மூடி வைக்காமல் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அதுகுறித்து போதிய விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள். ஏடிஎஸ் கொசு குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரிநேசன் அளவு பரிசோதிக்கப்படுகிறது.

    பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க முன்வர வேண்டும். வீடு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் கான் கீரிட்டுக்காக பயன்படுத்தும் தண்ணீர் 3 நாள்களுக்கு மேல் தேங்கி இருக்காத வகையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தங்கள் வீட்டைச்சுற்றி தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண் பானை உள்ளிட்ட தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்கள் இருந்தால் உடனயாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டிக்கு பின்புறம் உள்ள பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.

    வீட்டில் உள்ள நபர்களுக்கோ, குழந்தைகளுக்கோ காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பின் சுய வைத்தியம் மேற்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று முறையாக மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டு அவரின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நிர்மல்சன், நகர் நல அலுவலர் டாக்டர் ஆனந்தகண்ணன், வட்டாட் சியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #KarurCollector
    Next Story
    ×