search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உல்லாச வாழ்க்கைக்காக திருடனாக மாறிய பிளஸ்-1 மாணவன் கைது
    X

    உல்லாச வாழ்க்கைக்காக திருடனாக மாறிய பிளஸ்-1 மாணவன் கைது

    உல்லாச வாழ்க்கைக்காக பைக்குகளை திருடி விற்ற பள்ளி மாணவன் மற்றும் வாலிபரை கைது செய்த போலீசார் 19 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை சென்னலேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    ஜெய்சங்கர் தன்னுடைய பைக்கை கலவை காளிஅம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வையாபுரி என்பவரது வீட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வையாபுரி வீட்டு வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஜெய்சங்கர் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தார். அப்போது, பைக் திருடு போயிருந்தது.

    உடனடியாக கலவை போலீசில் புகார் அளித்தார். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். கலவை பஸ்நிலையத்தில் திருடு போன ஜெய்சங்கரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

    அங்கிருந்த பைக் திருடிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பள்ளிகொண்டா வேப்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் என்பது தெரியவந்தது.

    மற்றொருவர், பள்ளிகொண்டா ஒலகாச்சி தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி மகன் வைரம் என்கிற பிரபு (20) என்பது தெரியவந்தது.

    பிளஸ்-1 மாணவனின் பாட்டி வீடு கலவை அகரம் பகுதியில் உள்ளது. இங்கு, மாணவனும், அவருடைய நண்பர் பிரபுவும் அடிக்கடி சென்றனர்.

    அப்போது, ஆற்காடு மற்றும் கலவை பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம், வாழத்தோப்பு பகுதியில் பதுக்கியுள்ளனர்.

    திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தனர். மது குடிப்பது, பெண்களுடன் சுற்றுவது என பணத்தை அள்ளிவீசி செலவழித்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

    இதையடுத்து, ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மாணவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பிறகு வெட்டுவானம், வாழத்தோப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனையிட்டனர்.

    அங்கு 18 திருட்டு பைக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவன் உள்பட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×